Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி: தச்சநல்லூர் தே.மு.தி.க. துணைச் செயலாளராக இருந்து வருபவர் சுந்தர்ராஜ் (வயது. 48). இவர் திருநெல்வேலி வண்ணார்பேட்டை பகுதியில், தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்கச் சென்றார். துணிகளுக்கெல்லாம் சோப்புப் போட்டு துவைத்து விட்டு, அவற்றை ஊறவைத்த நிலையில் ஆற்றில் இறங்கி குளிக்கலானார். அவ்வாறு குளித்துக் கொண்டிருக்கும் போது, சுந்தர்ராஜூக்கு, திடீரென வலிப்பு வந்ததால், தண்ணீர் மூழ்கி தத்தளித்தார். நண்பகல் நேரம் என்பதால், ஆற்றில் அங்கொருவரும், இங்கொருவருமாக சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அருகில் எவருமே இல்லாத காரணத்தால், சுந்தர்ராஜ், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்
குளிக்கச் சென்றவர் நீண்ட நேரமாகியும், வீட்டுக்குத் திரும்பி வரவில்லையே? என்று, சுந்தர்ராஜ் குடும்பத்தினர், அவரைத்தேடி ஆற்றுக்கு வந்த பிறகே, சுந்தர்ராஜ் நீரில் மூழ்கி இறந்து போனது தெரியவந்தது. தாமிரபரணி ஆற்றங்கரையில், சுந்தர்ராஜின் உடலைப் பார்த்து, அவருடைய உறவினர்கள் கதறி அழுதது, அதனைக்காண்பவர் கண்களில், கண்ணீரை வரவழைத்தது. அவர் உடல் மீட்கப்பட்டு இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த தே.மு.தி.க. நிர்வாகிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.